சில பொருட்களை நுகர்ந்தாலோ, உபயோகித்தாலோ சிலருக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படும். உதாரணமாக தூசி, முகப்பவுடர், சோப் இவைகளால் பலருக்கு ஒவ்வாமை ஏற்படம். அதுவும் மருந்துகள் உண்டாக்கும் அலர்ஜி, அபாயமானது. உணவு ஒவ்வாமை என்பது, குறிப்பிட்ட உணவு ஒருவருக்கு உண்டாக்கும் ஒவ்வாமை பாதிப்பு. இத்தகைய அலர்ஜியை உண்டாக்கும் சில உணவுப் பொருட்கள் – வேர்க்கடலை, சில வகை மீன்கள், பால், முட்டை, சோயா பீன்ஸ் போன்றவை. காய்கறிகளில் கொத்தவரங்காய் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். உணவு ஒவ்வாமை குழந்தை பருவத்திலிருந்தே தெரிய வரலாம். அதுவும் உணவு அலர்ஜி, ஆஸ்துமா அலர்ஜி உடைய பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும், அதே போன்ற அலர்ஜிகளுடன் பிறக்கலாம். குழந்தைகளில், அலர்ஜியின் முதல் அறிகுறி – சொறி, அரிப்பு, சிறு கொப்பளங்கள், வயிற்றுப்பிரட்டல், பேதி ஏற்படலாம். சாதாரண உணவு அலர்ஜிகள் குழந்தைகள் 10 வயது சிறுவர்களாகும் போது மறைந்து விடலாம். பெரியவர்களுக்கு ஒவ்வாத உணவு, சொறி, வாயில் அரிப்பு, எக்ஸிமா சிவப்பு தழும்புகள் (கொப்பளங்கள்), ஜலதோஷம், ஆஸ்த்துமா, இழுப்பு இவற்றை உண்டாக்கலாம். தொண்டை வீங்கி மூச்சு விட சிரமம் ஏற்படும். உடனே டாக்டரிடம் போக வேண்டிய நிலை ஏற்படும். அலர்ஜி உண்டாக்கும் உணவை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? ஒவ்வொரு உணவாக ஒதுக்கிப்பார்த்தால் தெரியும். உங்களுக்கு அலர்ஜி வந்தால், அந்த நிலையில் உண்ட உணவு பொருட்களை ஒரு வாரம் சாப்பிட வேண்டாம். டாக்டர் பரிந்துரைக்கும் உணவை மட்டும் உட்கொள்ளவும். ஒரு வாரத்தில் அலர்ஜி ஏதும் ஏற்படவில்லை என்றால், நீங்கள் சாப்பிடாமல் விட்ட உணவை, ஒவ்வொன்றாக சேர்த்துக் கொண்டு வரவும். அலர்ஜி அறிகுறிகள் தோன்றினால், எந்த உணவு என்று கண்டுபிடித்துவிடலாம். வேறு முறையில், நீங்கள் உண்ட உணவுப்பொருட்களின் சாரம், உங்கள் சரும தோலில் பரிசோதிக்கப்படும். உணவு ஒவ்வாமை, உணவை சகித்துக் கொள்ள முடியாமை – இவை இரண்டும் ஒன்றல்ல. பாலின் லாக்டோஸ் சிலருக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒவ்வாமை அல்ல.




