வாயு உலகெங்கும் வியாபித்திருப்பது போல, உடலெங்கும் வியாபித்து இருக்கிறது என்பது பரவலான கருத்து. நடுத்தர வயதினர், முதியவர்கள், வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்த தொடங்கி மூட்டுவலி, கால் வலி எல்லாவற்றுக்கும் வாயுவை பழிசொல்லாமலிருப்பதில்லை
அபான வாயு உடலிலிருந்து பிரிவதை யாருமே விரும்புவதில்லை. பலர் முன்பு இது ஏற்பட்டால், தர்ம சங்கடமாக நாம் நினைக்கிறோம். புகழ் பெற்ற அரேபிய இரவுகள் கதைகளில், ஒரு விருந்தின் முடிவில், பலர் முன்பு வாயு வெளியேறியதால், அவமானமடைந்த ஒருவர் ஊரை விட்டே ஓடி விடுவதாக ஒரு கதை உண்டு! சராசரியாக, ஒரு இந்தியன் ஒரு நாளில் 2-4 தடவை அபான வாயுவை வெளியேற்றுகிறான். இந்த வாயு நாற்றமில்லாமலே இருக்கலாம். இதை அடக்குவது கூடாது என்கிறது ஆயுர்வேதம்.
உடல் முழுவதும் காற்றடைத்த பையல்ல வாயின் வழியே உள் நுழையும் காற்று இரப்பையால், ஏப்பமாக திருப்பி அனுப்பப்படும். வயிற்றிலிருந்து வாய்வும், மலமும் வெளியேறுவது நல்லது. இவை தேங்கிவிட்டால்தான் பிரச்சனை. ஜீரண மண்டலத்தில் அதிக வாயு உணடானால், அதை வெளியேற்ற பல வழிகள் மேற்கொள்ளப்படுகிறது. குதம் வழியாகவும், வாய்வழியே ஏப்பமாகவும் வெளியேற்றப்படும். மூன்றாவது முறையாக, ஜீரண அவயங்களின் சுவர்கள் வழியே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, நுரையீரல் வழியே வெளியேற்றப்படுகிறது. ஜீரண மண்டலத்திலுள்ள பாக்டீரியாக்களும் சுலபமாக வெளியேற்றுவதற்காக, வாயுவை சிதைத்து மாற்றுகின்றன.
வாய்வுத் தொல்லைகளின் காரணங்கள்
1. மூக்கினால் சுவாசிக்கும் காற்று முற்றிலும் நுரையீரலுக்கு சென்று விடும். வாயினால் இழுக்கப்படும் காற்றின் பெரும்பகுதி ஏப்பமாக திரும்பும். இந்த காற்றில் 20 சதவிகிதமாவது ஏப்பமாக திரும்பாமல் தங்கி விடும். வாயினால் காற்றை விழுங்கும் பழக்கம் பலரிடம் அதிகமாக உள்ளது. மன இறுக்கம், டென்ஷன் உள்ளவர்கள் உணவு உண்ணும் போது மற்றவர்களை விட அதிக காற்றை உணவுடன் உட்கொள்ளுவார்கள். அதிக வாயு தொல்லைகளை உண்டாக்கும். அதிகமாக சாப்பிடுவது, பேசிக் கொண்டே சாப்பிடுவதும் காற்று உள்ளே போக ஏதுவாகும்.
2. குடலில், பேக்டீரியாவின் வளர்சிதை மாற்றத்தால், ஹைட்ரஜன், மீதேன் (Methane) மற்றும் கார்பன்டைஆக்ஸைட் வாயுகள் உண்டாகின்றன. இந்த வாயு உற்பத்தி, முட்டை கோஸ், பீன்ஸ் இவற்றை உண்டால் அதிகமாகும்.
3. உணவில் அதிகமாக கிழங்கு வகைகளை சேர்த்துக் கொண்டால் வாயு உண்டாகும்.
4. சிலருக்கு, சர்க்கரையை ஜீரணிக்கும் நொதிகள் (Enzyme) குறைந்து போய் அந்த நிலையில் சர்க்கரை உணவுகளை சாப்பிட்டால், அபரிமிதமாக வாயு உண்டாகும். குறிப்பாக லாக்டேஸ் (Lactase) என்சைம் குறைந்தால், பாலில் உள்ள லாக்டோஸை (Lactose) ஜீரணிப்பது கடினம். இந்த குறைபாடு உள்ளவர்கள் பாலை குடித்தால் வாய்வு தான் அதிகமாகும்.
5. பேங்கிரியாடைட்டிஸ் எனும் பாதிப்பினால் கணையத்திலிருந்து வரும் ஜீரண சாறு குறைபாட்டினால், ஜீரணம் சரிவர நடக்காது. அப்போது வாயு உண்டாகும். நுரையுடன் மலம் வரும். இந்த நுரை வாயுவினால் ஏற்படுவது.
6. அமீபியாசிஸ் (Amoebiasis) நோயால், அதிக வாயு உண்டாகும்.
7. செயற்கை பற்கள் சரியாக பொறுத்தப்படாவிட்டால், உமிழ்நீரை அதிகம் முழுங்க நேரிடும். உமிழ் நீரில் காற்றுக்குமிழிகள் இருப்பதால் காற்றையும் சேர்த்து விழுங்க நேரிடும்.
8. ரத்த அழுத்தம், வலி, நோய் எதிர்ப்பு இவற்றுக்கான மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு, பக்க விளைவாக குடல் தசைகள் அசைவது அதிகமாகும். இதனால் வாயு அதிகமாக வெளியாகும்.
அறிகுறிகள்
அடிவயிறு வலி, வயிறு உப்புசம் ஏற்படும். சாப்பிட்டவுடன் அதிகமாக ஏப்பம் வரும். சாதாரண சமயங்களில் கூட ஏப்பம் வந்து கொண்டே இருக்கலாம். அபான வாயு, நாற்றத்துடனோ, நாற்றமில்லாமலோ, அடிக்கடி பிரியும்.
சிகிச்சை
1. பான் பாக்கு சாப்பிடுவது, புகைப்பது இவற்றை நிறுத்தவும்.
2. மாமிசம், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவற்றை தவிர்க்கவும். இனிப்பு, பருப்பு, தக்காளி இவைகளையும் குறைக்கவும்.
3. எந்த உணவால் வாயு அதிகம் உண்டாகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். முதலில் பால், பால்சார்ந்த உணவுகளை நிறுத்திப்பாருங்கள். பிறகு பழங்கள், சில காய்கறிகள், ஒரேடியாக வாயுவை உண்டாக்கும் உணவுகளை நிறுத்தி விட வேண்டாம். ஒவ்வொன்றாக நிறுத்தவும்.
4. சாப்பிடும் போது பேசாதீர்கள். நிதானமாக மென்று சாப்பிடவும்.
5. டீ, காப்பி தவிர்க்கவும். அதே போல் பாட்டில் பானங்கள் வேண்டாம்.
வீட்டு வைத்தியம் ஆயுர்வேத சிகிச்சை
1. ஏலக்காய் நல்ல வீட்டு மருந்து. தண்ணீருடன் 5 கிராம் ஏலக்காய் பொடியை எடுத்துக் கொள்ளலாம். நெய்யில் வறுத்த பெருங்காயம், கருஉப்பு, சுக்கு, ஏலக்காய் இவைகளெல்லாம் ஒவ்வொன்றும் 5 கிராம் எடுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இந்த கலவையில் 1/2 ஸ்பூன் தண்ணீருடன் 2, 3 தடவை எடுத்துக் கொள்ளவும். வாயு அகலும்.
2. புதினா, இலவங்கம், இஞ்சி இவற்றின் சாரத்தை இரண்டு துளிகள், ஒரு கப் சுடுநீரில் சேர்த்து குடிக்கவும்.
3. பெருஞ்சீரகம், ஒரு பாகம், செலரி விதைகள் இரண்டு பாகம், சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
4. குழந்தைகளுக்கு பெருங்காயம் கரைத்த வெந்நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
5. ஒரு தேக்கரண்டி துளசி சாற்றுடன் 1/2 தேக்கரண்டி நெய் கலந்து குடிக்கலாம்.
ஆயுர்வேத மருந்துகள்
1. சிறந்த மருந்து ஹிங்கு வாஷ்டக சூரணம்.
2. குமரி அசவா
3. ஹிங்குத்ரிகு தைலம்
4. ராஜ்வடீ




